வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, February 28, 2009

தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது




தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கே. ராஜேந்திரன் M.Sc.,M.Ed., அவர்களுக்கு தமிழக அரசின் 2008 ம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.

இவர் கடந்த 28 ஆண்டுகளாக தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் துறை ஆசிரியராகவும் 01-10-2007 முதல் பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி LCD Projector திரை மூலம் செயல்முறை கல்வியளித்து மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்ப்பதுடன் ஆண்டுதோறும் ஏ.வி.சி. கல்லூரியின் பேராசிரியர்களை அழைத்து Biology, Micro Biology, Micro Informatics போன்ற துறைகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு செமினார் வகுப்புகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. பெரும்பாலான ஆண்டுகளில் 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்திலும் 12-ம் வகுப்பு உயிரியல் பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டினை பெறச்செய்தது பாராட்டுக்குரியது.

இவ்வாண்டு மாவட்ட அளிவிலான 116 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியை மிகச்சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. மேலும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் சிறந்த இலக்கிய ஆர்வலர். அறிவியலை இலக்கியத்துடன் கலந்து மாணவர்களை நன்னெறிப் படுத்துவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

மேலும் தொண்டு நிறுவனங்களான Lions New Century Club, Rotary Club மற்றும் சமரச சன்மார்க்க இளைஞர் கழகம் ஆகியவை இவருக்கு ஆசிரியச்செம்மல், அறம் வளர்ச் செம்மல் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. இன்ட்ராக்ட் கழக பொறுப்பாளராகவும், நாட்டு நலப்பணித்திட்ட உதவித் திட்ட அலுவலராகவும் இருந்து பல சமுதாயத் தொண்டினையும் செய்துள்ளார்.

தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பின்பு முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவி பெற்று பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். இத்துடன் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு காலம் பாராமல் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் இவருக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது பெருமைக்குரியதாகும்.